அமெரிக்கா, ஈரானில் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரானில் அமெரிக்கா நிர்ணயித்துள்ள முக்கிய ராணுவ இலக்குகளை அடைவதில் “மிகவும் நெருக்கமான” நிலையை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அடுத்த கட்டமாக ராணுவ நடவடிக்கைகளை விரைவில் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா நேரடியாகப் பயன்படுத்துவதில்லை என்றும், அதன் பாதுகாப்பு பொறுப்பு அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகளுக்கே சொந்தமானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் பிற நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும், ஈரானின் அச்சுறுத்தல் முற்றிலும் நீக்கப்பட்ட பின் அமெரிக்காவின் உதவி அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தேவையான சூழ்நிலையில் பிற நாடுகள் உதவி கோரினால் மட்டுமே அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, ஈரானின் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு திறன்கள் சுமார் 90 சதவீதம் வரை பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்நிலைமைகள் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.