மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

திரிபோஷா தயாரிப்பிற்கு தேவையான தரமான மக்காச்சோளம் கிடைக்காததால் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதும் விநியோகம் சீர்குலைந்திருந்தது.
இதனை சரிசெய்யும் நோக்கில், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலையீட்டின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் மக்காச்சோளம் இறக்குமதி செய்ய அரச வர்த்தகப் பல்வகை கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் தேவையான மூலப்பொருட்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதால், உற்பத்தி மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
திரிபோஷா நிறுவனத் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்ததாவது, விநியோகத்தை தடை இல்லாமல் முன்னெடுக்க 24 மணி நேரமும் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த மாத இறுதிக்குள் திரிபோஷா பெறாமல் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்கள் மூலம் நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதங்களிலும் எந்தத் தடையும் இல்லாமல் விநியோகத்தை தொடர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.