அமெரிக்காவுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு பிராந்திய இராணுவ தளங்கள் மற்றும் முக்கிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மேற்கொள்ளப்பட்டதாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
IRGC வெளியிட்ட அறிக்கையில், “உண்மையான வாக்குறுதி 4” (Operation True Promise 4) நடவடிக்கையின் 86வது அலைக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த பல கட்ட தாக்குதலாகும்; இதில் IRGC-யின் விண்வெளி பிரிவு மற்றும் கடற்படை இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க இராணுவம், இஸ்ரேல் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக அரத், நெகேவ், டெல் அவிவ், எர்பில், அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் மற்றும் அல் தஃப்ரா விமானத் தளம் உள்ளிட்ட பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட வெடிப்புகள், புகைமூட்டங்கள் மற்றும் சேதமடைந்த உயர் மதிப்புள்ள அமெரிக்க விமானங்களின் சிதைவுகளை காட்டும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் தாக்குதல் தகவல்களை மறைக்க முயன்றாலும், உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாக IRGC வலியுறுத்தியுள்ளது.